இப்படித்தான் உன்னை நேசிக்க ஆசை
***********************************************************
அன்று பௌர்ணமி மூன்றாம் நாள்,
நல்ல காற்றழுத்தப்புணர்வு.
சாலை குழிகளில்,
மணற் பாலையில்
ஊற்றுநீர்த் தேங்கியிருக்கும்.
கடற்கரை திட்டுகள் சாந்தமாய் இருக்கும்
வாழைப்பழம் தின்றுவிட்டு,
தோலை
அங்குதான் வீசியிருந்தேன்.
என்ன ஒரு
பொறுப்பற்ற செயல்
என்று நினைப்பதற்குள்
அதுமேல் நீ கால் சருக்கினாய்,
இடறிவிழும் உன்னை
இரு கைகள் கொண்டு ஏந்தினேன்
அதுதான் நம்
முதல் பார்வையும்,
முதல் சரும மீட்டலும் ம்ம்
பதுக்க இறக்கியதும்
திரும்பிப் பார்த்தே போகிறாய்,
நானும் தொடர்கிறேன்
இதோ இப்போது என்வகை,
ஒரு குழிக்குள் கால் இடறுகிறேன்
துரிதமாக ஓடி ஏந்துகிறாய்
அதுதான் நம்
இரண்டாம் பார்வையும்
இரண்டாம் சரும மீட்டலும்
பழத்திற்கு பதில்,
பழத்தாரே வாங்கிருக்கலாம் போல ம்ம்
நீ வரும் முன்னமே,
பத்தடிக்கு ஒரு குழிதோண்டி,
அவற்றிலெல்லாம்,
நீர் நிரப்பி வார்த்திருக்கலாம் போல ம்ம்
அப்படி செய்திருந்தால், !!!
இன்னும்
எத்தனை எத்தனை
பார்வையும்
எத்தனை எத்தனை
சரும மீட்டலும்
கண்டிருக்கலாம் நாம் ம்ம்
குழிக்குள் விழுந்த உன் கண்களை
பொறுக்கி எடுத்துச் செல்லாதே
அவைகளால்தான்
பார்வை ஒளிர்கிறேன்
ஏதும் பேசாமல் சென்ற
உன்னையே
பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்
உன் காதோர முடிகளில்
மூன்று நான்கு பிசிறுகள்
நெஞ்சுச்சட்டை பொத்தானில் சிக்கி
கொள்முறை இறுகின
ஸ்பரிசித்த செவிகளோ,
என் மொழி
கேட்டிருக்கவில்லை
கடக்கைகளும்,
தொங்கட்டாவும்
அலைகளோடு புணர்ந்து
உன் மௌனம் கரைத்தவைகளில்
காது நனைந்தேன்
வருடாந்திரத்திற்கு
ஒருமுறைதான் வசந்தம் வரும்
சதா உன்னை
நினைத்திருக்கையில்
முறைக்கு முறை வசந்தம் வந்து போகும்
பிசுகி வியர்த்த நிலவெளியை
முத்தமிட அருகும்
சிறு சிவிறுதலைப் போல
நமக்குள்
சொல்லாமலேயே
நெரித்துக்கொண்டிருக்கும்
இக் காதல்பாறைகளை
இன்னொரு மோதலின் மந்தகாசத்தினால்
எப்போது உடைக்கப் போகிறோம்
சீக்கிரம் வா
சந்திக்கின்ற கணங்களால்
பலமுறை சிரித்துக்கொள்ளலாம்
பதியமிடும் உதடுகளால்
அனர்த்தனம் மேவிக் கொள்ளலாம்
ஆண்கள் கரு சுமக்காதவர்களாம்
யாரோ சொன்னார்கள்
அவர்களுக்குத் தெரியுமா
பத்துமாதம் சுமந்து
உன்னை
இறக்கிவிட்ட பாரத்தைவிட
பிரசவத் தேதி இல்லாமல்
மனக்கருவே
உன்னை நினைக்கின்ற பாரம்
அவ்வளவு எள்ளல் இல்லை என்று
சில நேரங்களில்
இதய பனிக்குடத்தின் சாரல்
இப்படித்தான் உடைகிறதுபோல் ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment